இந்தியாவில் புகைப்பிடிக்க தடையா?

அக்டோபர் 2 முதல் இந்தியாவில் புகைப்பிடிக்க தடை என்ற சட்டம் கொண்டு வந்து தீவிரமாக அமல் படுத்தினார் நம் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமனி ராமதாஸ் அவர்கள்.


பல தரப்பிலிருந்தும் இந்த சட்டத்திற்கு பலவாறான கருத்துக்கள் வந்தது. சிலர் இந்த சட்டத்தை அமல் படுத்துவதில் இருக்கும் நடைமுறை சிக்கலை எடுத்துரைத்தார்கள். சிலர் இந்த சட்டம் PASSIVE SMOKING தடுப்பதற்கு கொண்டுவரப்பட்டுள்ளது, குறை கூறவேண்டாம் என்றார்கள்.

இந்த சட்டத்தை முழுமையாக அமல் படுத்துவதில் இருக்கும் நடைமுறை சிக்கல், மேலும் எத்துனை மாதங்கள் இது தாக்குப்பிடிக்கும், பான் பராக் தடையை போலத்தான் இந்த சிகரெட் தடையும் மாறும் வாய்ப்புள்ளது என்ற என் ஆதங்கத்தை நானும் சின்ன அய்யா - சிறு யோசனை என்ற தலைப்பில் பதிவாக இட்டேன்

அக்டோபர் 2 க்கு பிந்தைய நிகழ்வுகளான இலைங்கைப்போர், அமெரிக்க தேர்தல், இங்கிலாந்து கிரிக்கெட், மும்பை தீவிரவாத தாக்குதல், கலைஞர் - மாறன் இனைப்பு, 5 மாநில தேர்தல் இத்யாதி இத்யாதி எல்லாம் இந்த சிகரெட் பிடிக்க தடை பற்றிய செய்திகளை சட்டத்தை பின்னுக்கு தள்ளிவிட்டது. பின்னுக்கு என்பதை விட, மறக்கடிக்கவே செய்துவிட்டது

சட்டம் அமல்படுத்தப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அமலாக்கம் எந்த நிலையில் உள்ளது?

முதல் 15 நாட்கள் மிக கடுமையான கன்கானிப்பு. ஆங்காங்கே அரசாங்க அறிவிப்பு, சுகதாரத்துறையின் சார்பாக விளம்பரங்கள், பா ம க வின் பசுமைதாயகத்தின் சார்பில் ஆங்காங்கே விளம்பர தட்டி, விழிப்புனர்வு பிரச்சாரம் (பிரச்சாரத்தில் ஈடுபட்ட பா ம க கரைவேட்டிகளே, இடையில் மேடையின் பின்னால் சென்று 2 வலி வலித்துவிட்டு வந்தது வேறு கதை),
மிகப்பெரும் அளவில் பொது இடங்களில் புகைப்பிடிப்பது கட்டுப்படுத்தப்பட்டது. டீ கடை , பொட்டிக்கடையின் வாசலில் புகை மூட்டமாக இருக்கும் நிலை மாறியது. ஓரிருவர் கடை மறைவில் நின்று பயந்து பயந்து எட்டிப்பார்த்து தம் இழுத்ததை பார்க்க முடிந்தது.
டீக்கடையின் உள்ளே கூட புகைப்பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. மிக தெரிந்த ரெகுலர் கஸ்டமர்களுக்கு மட்டுமே டீ கடைகள் அனுமதி தந்தது.

அடடா! இந்த சட்டத்தின் மூலம் பெருமளவில் புகைப்பது குறைந்து. கடைவாயில்கள், தெருவீதிகள், பொது இடங்களில் புகை மன்டலம் குறைந்து, (PASSIVE SMOKING ) பேசிவ் ஸ்மோகிங் குறைந்து விட்டதே என்று சந்தோஷப்பட்டது அடுத்த 10 நாட்களில் புஸ்ஸாகிப்போனது தான் வேதனை.

கிட்டதட்ட 15 - 20 வது நாட்கள் மட்டுமே இந்த சட்டம் அமல் படுத்தப்பட்டது.. 21 வது நாளில் இருந்து மெல்ல மாற்றம் தெரிந்தது.. கடை மறைவிலும் ,கதவு இடுக்கிலும் நின்று புகைத்தவர்கள் வெளி வந்து நின்று புகைக்க துவங்கினர்..
கடை வாசலில் 2, 3 பேர் மட்டுமே புகைத்தது 5, 6 , 7.. என்று மெதுவாக ஏறத்துவங்கியது. பொது இடங்களிலும் கண்கானிப்பு இல்லை என்ற நிலை வந்த பிறகு நம் புகையாளிகள் வழக்கம் போல ஒளித்துவைத்திருந்த சிகரெட்-தீப்பெட்டியை தைரியமாக வெளியில் எடுத்தனர்.. பேருந்து நிலையம் , ஓட்டல், டீக்கடை, சாலைகள் என்று அனைத்து இடங்களும் பழைய குருடி கதவை திறடி என்பதற்கு ஏற்ப மாறிவிட்டது..
இந்திய திருநாட்டில் ஒரு சட்டத்தின் நிலை இது தானா?? 15 நாட்களுக்கு மேல் ஒரு சட்டத்தை அமல் படுத்த முடியவில்லை..

இந்தியாவில் புகைக்க தடையிருக்கிறது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?

ஒரே ஆறுதலான விஷயம்- பல அலுவலக வளாகங்களில் ஸ்மோக் ஜோன் (SMOKE ZONE) என்பதை எடுத்துவிட்டுருந்தனர். வெளியிலும் கட்டுப்பாடு இருந்தததால் அலுவலக நேரத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்போரின் புகைத்தல் பெருமளவில் கட்டுப்படுத்தப்படிருந்து. ஆனால் இப்போது வெளியில் கட்டுப்பாடு தளர்ந்துவிட்டதால் அதிலும் ஓட்டை விழுந்துவிட்டது.
அலுவலக வளாகத்தில் இருந்து வெளியே நடந்து வந்து புகைக்க வேண்டும் என்ற நிலையில், சோம்பல் காரணமாக சிலரின் புகைப்பழக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.. ஆனால் இதுவும் எத்தனை நாள் ??? மீண்டும் அலுவலக வளாகங்களில் புகைப்பிடிக்கும் பகுதி வராது என்று நிச்சயமாக சொல்ல இயலாது.. 2 மாதத்தில் வெளியிடங்களில் வந்த இந்த நிலை, மேலும் 5 மாதத்தில் அலுவலக வளாகங்களுக்கும் வரும் நிலை தான் தெரிகிறது.
ஆரம்பத்தில் இந்த சட்டத்தை செயல்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள் பற்றி கேள்வி எழுப்பபட்ட போது ஆயிரம் விளக்கங்களை சுகாதாரத்துறை கொடுத்திருதாலும், இன்றைய நிலையில் சட்டத்தை அமல் படுத்துவதில், அரசும், சுகாதாரத்துறையும், காவல் துறையும் பசுமைத்தாயகமும் படுதோல்வி அடைந்து விட்டதாகவே உள்ளது..

இந்த தடையை ஊர்ஜிதப்படுத்திய உச்சநீதிமன்றம் என்ன செய்கிறது?? யாராவது பொது நல வழக்கு தொடரட்டும் என வாயிற்கதவை அகலத்திறந்து வைத்து காத்திருக்கிறதா..??
பான் பராக் தடை என்பது எப்படி ஆனதோ , அதே கதி தான் சிகரெட்டுக்கும் ஆனது.. போதை வஸ்துக்கள் பவர் தெரிகிறது..
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது,
திட்டம் போட்டு திருடுற (புகைக்குற) கூட்டம் திருடிக்கொண்டே (புகைத்துக்கொண்டே) இருக்குது .
திருடனாய் (புகைப்பவனாய்) பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை (புகையை) ஒழிக்க முடியாது..

6 கருத்துக்கள்:

வாக்காளன் said...

மிகச்சரி.. அதிலும் அந்த கடைசி நாலு வரிகள்.. அருமை. பொருத்தமான பாட்டு

ராஜேஷ், திருச்சி said...

எங்கல் ஏரியாவிலும் (திருச்சி) பழைய குருடி கதவை திரடி கதை தான்..

வீ. எம் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாக்காளன் & ரஜேஷ் , திருச்சி

ராஜேஷ், திருச்சி said...
This comment has been removed by the author.
Unknown said...

பத்தோடு ஒன்னு பதினொன்னு அத்தோடு இது ஒன்னு என்ற அளவில் தான் இந்தியாவில் சட்டங்களுக்கு மதிப்புள்ளது. என்ன பன்றது

தமிழ் said...

/வறுமையை வென்றவன் நான்.
நீயெல்லாம் எம்மாத்திரம்.
வா அருகில் வா..
===================================

ஐந்து தலை நாகமே, அருகில் வராதே -
உயிருக்கு உத்தரவாதம் இல்லை.-
அகோர பசியில் நான்../

அருமையான வரிகள்

தங்களின் வரிகளை

இந்த வலைப்பக்கத்தில் பதிவு செய்யவும்

மனம்: இந்த படத்திற்கு ஏற்ற கவிதை ப்ளீஸ்

வாழ்த்துகள்