வடிவேலு பிரச்சாரம்

இதுவரை எத்தனையோ நடிகர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்குப் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத உச்ச அந்தஸ்து, ஒருவருக்கு கிடைத்திருக்கிறது. அவர்தான் வடிவேலு! திருவாரூரில் கலைஞர் முன்னிலையில் விஜயகாந்தை தாக்கி அவர் பிரச்சாரத்தை ஆரம்பித்தபோது, 'இதென்ன ஏகத்துக்கும் தனிப்பட்ட தாக்குதல் நடத்துகிறாரே' என சற்று முகம் சுளிக்கத்தான் செய்தார்கள். ஆனால் அடுத்தடுத்த ஊர்களில் அவர் பிரச்சாரம் செய்த விதம், மக்களை நகரவிடாமல் கட்டிப்போட்டது. வடிவேலு அடுத்துப் பேசும் இடம் எங்கே என விசாரிக்கும் அளவுக்கு ஆர்வமாகிவிட்டனர் மக்கள். சினிமாவில் ஹீரோவாக 'லெக்' பைட் போட்டுக் கொண்டிருந்த விஜயகாந்தை, அரசியலில் 'காமெடியன்' எனும் அளவுக்கு வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில், வடிவேலு பேச்சுக்கு ஏக வரவேற்பு. மருதமலை, கிரி போன்ற படங்களில் அவர் பேசிய சில நகைச்சுவை பஞ்ச்களை விஜயகாந்தைக் குறிவைத்து டைமிங்காக அவர் அடிக்க, மக்கள் சிரித்தனர். "எதையாவது திங்கணும்னு ஆசையாயிருந்தா கடைக்கு போய் ஒரு வடைய வாங்கித் திண்ணு, பன்னை வாங்கித் திண்ணு.." என்று மருதமலை படத்தில் அவர் பேசும் காட்சி ரொம்பப் பிரபலம். இன்றைய பிரச்சாரத்தில், ஒரு இடத்தில் விஜயகாந்தின் முதல்வர் பதவி கனவை விமர்சித்த வடிவேலு, "விஜயகாந்துக்கு முதல்வராகனும்னு ஆசை இருந்தா எங்கிட்டாவது ஒரு அஞ்சு கோடி பத்து கோடி கொத்து சினிமா எடுக்கச் சொல்லி அந்த வேசத்தை போட்டுக்கலாம்... அதை விட்டுப்புட்டு முதல்வராகராம்... இது நல்லாவா இருக்கு!" என்ற மருதமலை பாணியிலேயே பேச, கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் கைதட்டிச் சிரித்தனர் மக்கள். திமுக, அதிமுக என்ற பேதமில்லாமல், அனைவருமே வடிவேலுவைப் பார்க்க வருகிறார்கள். அவர் பேச்சை ரசித்துக் கேட்கிறார்கள். 'யத்தா... நம்ம ஸ்டாலின் அய்யா மேல ஒரு மாசு மருவு சொல்ல முடியுமா... எவ்வளவு தங்கமான மனுசன். நீங்க போனாலும் வாசலுக்கு வந்து வரவேற்பாரு... அப்படி ஒரு மனுசன் ஜெயிச்சி ஆட்சிக்கு வந்தா நாடும் நல்லாருக்கும், உங்க தொகுதியும் நல்லாருக்கும். குடிகாரங்ககிட்ட நாட்ட கொடுத்துடாதீங்க, சொல்லிட்டேன்", என பெண்களிடம் அவர் பேசும் விதம் நன்றாகவே ஒர்க் அவுட்டாகிறது - Thanks - Thatstamil.com